×

யாத்திராகமம் : 21

  • 1 : மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன:
  • 2 : எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.
  • 3 : ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.
  • 4 : அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
  • 5 : அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
  • 6 : அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டு போய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
  • 7 : ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
  • 8 : அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.
  • 9 : அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
  • 10 : அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.
  • 11 : இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள்.
  • 12 : ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  • 13 : ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.
  • 14 : ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
  • 15 : தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  • 16 : ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  • 17 : தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
  • 18 : மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில் கிடையாய்க் கிடந்து,
  • 19 : திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும் அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.
  • 20 : ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
  • 21 : ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.
  • 22 : மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
  • 23 : வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
  • 24 : கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
  • 25 : சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
  • 26 : ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
  • 27 : அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிட வேண்டும்.
  • 28 : ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.
  • 29 : தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
  • 30 : அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.
  • 31 : அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
  • 32 : அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
  • 33 : ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
  • 34 : குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
  • 35 : ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
  • 36 : அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.