×

யோபு : 13

  • 1 : இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
  • 2 : நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
  • 3 : சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
  • 4 : நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
  • 5 : நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
  • 6 : நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
  • 7 : நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
  • 8 : அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
  • 9 : அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம் பண்ணுவீர்களோ?
  • 10 : நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
  • 11 : அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
  • 12 : உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
  • 13 : நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
  • 14 : நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
  • 15 : அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
  • 16 : அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
  • 17 : என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
  • 18 : இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
  • 19 : என்னோடே வழக்காடவேன்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
  • 20 : இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
  • 21 : உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
  • 22 : நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
  • 23 : என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
  • 24 : நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
  • 25 : காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
  • 26 : மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப் பண்ணுகிறீர்.
  • 27 : என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
  • 28 : இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.