×

யோபு : 32

  • 1 : யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினாலும், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
  • 2 : அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத் தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
  • 3 : கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
  • 4 : அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
  • 5 : அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக்கோபம்மூண்டது.
  • 6 : ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
  • 7 : முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
  • 8 : ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
  • 9 : பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
  • 10 : ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
  • 11 : இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
  • 12 : நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
  • 13 : ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.
  • 14 : அவர் என்னைப்பார்த்துப்பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
  • 15 : அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
  • 16 : அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
  • 17 : நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
  • 18 : வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
  • 19 : இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்தது, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புதுரசத்தைப் போலிருக்கிறது.
  • 20 : நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
  • 21 : நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
  • 22 : நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.